தமிழ்நாடு

புதிதாக உருவாக்கப்பட்டது கொளத்தூர் காவல் மாவட்டம்! புதிய துணை ஆணையர் நியமனம்

நிவேதா ஜெகராஜா

சென்னை காவல்துறையில் புதிதாக கொளத்தூர் காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு புதிய துணை ஆணையரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் 26 காவல்துறை அதிகாரிகளுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கியும் பணியிடங்களை ஒதுக்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் எஸ்பி ஒருவரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவற்றுடன் குறிப்பாக சென்னை காவல்துறையில் கொளத்தூர் காவல் மாவட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூருக்கு தனியாக துணை ஆணையர் ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளது. இதன்கீழ் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏஎஸ்பியாக இருந்த ராஜாராம் எஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சென்னை காவல் ஆணையரகம் ஆவடி காவல் ஆணையரகம், தாம்பரம் காவல் ஆணையரகம் என பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையரகத்தில் 12 காவல் மாவட்டங்கள் இருந்தது. 2 ஆணையரகங்ள் பிரிக்கப்பட்டபோது அம்பத்தூர் காவல் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு சென்று விட்டது. இதனால் 11 காவல் மாவட்டங்களாக மாறியது. தற்போது சென்னை காவல்துறைக்கு கொளத்தூர் காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளதால் மீண்டும் காவல் மாவட்டம் எண்ணிக்கை 12 ஆகவே மாறி உள்ளது. சென்னை காவல்துறையில் சட்டம் ஒழுங்கு பணிக்காக 12 துணை ஆணையர்கள் உள்ளனர்.

இதைப்போல, பண்டிகங்காதர் கரூர் மாவட்ட செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எஸ்பியாகவும், ஜோஷ்தங்கையா- தாம்பரம் காவல் ஆணையரக பள்ளிக்கரணை துணை ஆணையானராகவும், வனிதா மதுரை மாநகர காவல்துறை தலைமையக துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். குமார் சென்னை போக்குவரத்து காவல்துறை கிழக்கு துணை ஆணையராகவும், ஸ்ரீதேவி திருச்சி நகர தெற்கு துணை ஆணையராகவும், லாவண்யா சேலம் நகர தெற்கு துணை ஆணையராகவும் நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும்
சக்திவேல் சென்னை காவல்துறை நுண்ணறிவு பிரிவு -2 துணை ஆணையராக அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக இந்த பதவி யாரையும் அமர்த்தவில்லை.

ஆரோக்கியம் சென்னை காவல்துறை நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராகவும், ராமமூர்த்தி சென்னை காவல்துறை நிர்வாகப்பிரிவு துணை ஆணையராகவும், கீதா குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாகவும், கோபி கீழ்ப்பாக்கம் காவல்துறை துணை ஆணையராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், குமார் சென்னை காவல் ஆணையரக மாதவரம் துணை ஆணையராகவும், அனிதா நெல்லை மாநகர காவல்துறை தலைமையக துணை ஆணையராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

-சுப்பிரமணி