ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை வழக்கு தொடுத்துள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். இதனால் ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று 2017 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவரின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மற்ற மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அப்போலோ செவிலியர்கள், அப்போலோ மருத்துவர்கள், அமைச்சர்கள்,சுகாதாரத்துறை செயலர், தமிழக முன்னாள் தலைமை செயலாளர்கள் என 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி அப்பல்லோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க வேண்டுமென்றால் 21 மருத்துவர்கள் கொண்டு குழுவை அமைக்க உத்தரவிடவும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது.
மேலும் வழக்கில் தமிழக அரசு, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், வி.கே.சசிகலா ஆகியோர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் முடியும் வரை மருத்துவ, சிகிச்சை விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.