தமிழ்நாடு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் விவகாரம் - மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Sinekadhara

எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொடர்புடைய ரவி என்பவரின் சென்னை அண்ணாநகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது பெயரிலும், அவருடைய மனைவி விஜயலட்சுமி பெயரிலும், தம்பி சேகர் பெயரிலும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகக்கூறி லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்மீது வழக்குப்பதிவு செய்து, அவருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூர் உட்பட 26 இடங்களில் சுமார் 13மணிநேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் ரூ.25,56,000 ரொக்கம், காப்பீடு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை தெரிவித்தது. அதற்கடுத்த சோதனைகளில் வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

2016 தேர்தல் வேட்பு மனுவில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாக தெரிவித்த நிலையில் கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர் அமைச்சராக இருந்தபோதுள்ள வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில் இது தெரியவந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்தனர்.

இதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி சகோதரர் சேகர் ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக எம்.ஆர். விஜயபாஸ்கருடன் தொடர்புடைய ரவி என்பவரின் அண்ணா நகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது சோதனை நடத்திவருகின்றனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஒப்பந்த நிறுவனமான டெடி நிறுவனத்தில் ரவி ஆலோசகராக இருக்கிறார்.