கோயம்பேடு இளம்பெண் கொலை விவகாரம் web
தமிழ்நாடு

கோயம்பேடு இளம்பெண் கொலை விவகாரம்| சிகிச்சையில் இருந்த மற்றொரு இளம்பெண்ணும் உயிரிழப்பு!

கோயம்பேட்டில் கார் ஏற்றி இளம்பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிகிச்சையில் இருந்த மற்றொரு இளம்பெண்ணும் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

Rishan Vengai

கோயம்பேடு மேம்பாலம் அருகே கார் மோதி உயிரிழந்த யான்சி வழக்கில், முதலில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பௌசி தீபிகாவும் பின்னர் உயிரிழந்தார். இன்ஸ்டாகிராம் நட்பால் தொடங்கிய இந்த சம்பவம், ஹோட்டல் பாரில் ஏற்பட்ட மோதல், பவுன்சர்கள் வெளியேற்றம், சாலையில் தாக்குதல் என தொடர்ந்தது. போலீசார் ஏழு பேரை கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் அனிச்சங்குப்பம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் மேரி ஸ்டெல்லா. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இளைய மகள் யான்சி(18),12ஆம் வகுப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்வதற்காக காத்திருந்தார். யான்சிக்கு கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாகிராமில் சென்னையை சேர்ந்த பௌசி தீபிகா (17) என்ற இபம்பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி பவுசியை பார்ப்பதற்காக யான்சி சென்னைக்கு வந்து அவரது வீட்டில் தங்கி வந்துள்ளார். கடந்த 28ஆம் தேதி யான்சி மற்றும் பவுசியா திரைப்படத்திற்கு சென்று வீட்டிற்கு தாமதமாக வந்ததால் பவுசியாவை தாய் திட்டியதால் வீட்டை விட்டு இருவரும் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு பவுசியா மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து யான்சியை அழைத்து கொண்டு கோயம்பேட்டில் உள்ள "சென்னை கேட்வே" என்ற தனியார் ஹோட்டல் பாருக்கு சென்றுள்ளனர். அப்போது மது அருந்திவிட்டு நடனம் ஆடி கொண்டிருந்த போது, அங்கிருந்த மற்றொரு தரப்பினருடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இதனால் பாரில் இருந்த பவுன்சர்கள் உடனடியாக பிரச்சனையில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் அங்கிருந்து வெளியே அனுப்பிய நிலையில், மீண்டும் வெளியே வந்து சாலையில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்திக் கொண்டனர். 

கார் ஏற்றிக் கொலை..

பின்னர் யான்சி, பவுசியா ஒரு இருசக்கர வாகனத்திலும் அவரது நண்பர்கள் 2 இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அங்கு காரில் காத்திருந்து எதிர் தரப்பினர் காரில் வேகமாக வந்து கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் யான்சி சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளனர். 

இதில் யான்சி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்த நிலையில், பவுசியா படுகாயமடைந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக இதுவரை போலீஸார் 7 பேரை கைது செய்​துள்ளனர்.

இந்நிலையில் தான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவந்த பவுசியாவும் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.