தமிழ்நாடு

குரங்கணி தீவிபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு

rajakannan

தேனி குரங்கணி தீ விபத்தில் படுகாயமடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு குழுவினர் கடந்த 10ஆம் தேதி மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். 39 பேர் கொண்ட குழுவில் 3 பேர் நீங்கலாக, 36 பேர் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். குரங்கணியில் இருந்து கொழுக்குமலைக்கு சென்றவர்கள் இரவில் அங்கு தள்ளியுள்ளனர். மார்ச் 11ஆம் தேதி கொழுக்குமலையில் இருந்து குரங்கணிக்கு இறங்கினர். அப்போது ஏற்பட்ட காட்டுத்தீயில் இவர்கள் சிக்கிக்கொண்டனர்.

இச்சம்பவத்தில் 10 பேர் காயங்கள் இன்றி தப்பிய நிலையில் நிகழ்விடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. பலத்த தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் மதுரை, ஈரோடு, கோவை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேலும் 9 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 12ஆம் தேதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை மருத்துவமனையிலிருந்து கோவை கொண்டு வரப்பட்டு, மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் அம்ருத்துவம்னையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஜெயஸ்ரீ உயிரிழந்தார். 32வயதான ஜெயஸ்ரீ, திருச்சி மாவட்டம் சமயபுரத்தை சேர்ந்தவர் என்றும், மென்பொறியாளராக சென்னையில் பணியாற்றி வந்தவர். இதனால், குரங்கணி வனத்தீயில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயரந்துள்ளது.