தமிழ்நாடு

அன்னூர்: மின்தடையால் கர்ப்பிணி உயிரிழப்பா? உறவினர்கள் போராட்டம் - போலீஸார் குவிப்பு

webteam

அன்னூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது ஏற்பட்ட மின்தடையால் கர்ப்பிணிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் அன்னூர் அரசு மருத்துவமனையில் வான்மதி என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு பிரசவம் பார்த்தபோது மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் வான்மதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், வான்மதி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த வான்மதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து வான்மதியின் உறவினர்கள் அன்னூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடை மற்றும் ஜெனரேட்டர் வேலை செய்யாததே வான்மதியின் உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதைத் தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் நிலவுவதால் மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.