சென்னை அண்ணாசாலை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரசீத், சாலையில் வருபவர்களை கையெடுத்து கும்பிட்டு தயவு செய்து வெளியே வராதீர்கள் என கோரிக்கை விடுத்தார்.
197 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,21,413ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4ல் ஒரு பங்காக 1,08,388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக இருந்தது.
தமிழகத்தை பொருத்தவரை கொரோனா பாதித்த 18 பேரில் 10 பேர் சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. ஈரோட்டில் அரசு மருத்துவமனையில் தாய்லாந்தைச் சேர்ந்த இருவரும், நெல்லை, கோவை, திருப்பூரில் தலா ஒருவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நியூசிலாந்து நாட்டில் இருந்து வந்தவர் குறித்த விவரமும், எங்கு சிகிச்சை பெறுகிறார் என்ற விவரமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. முதன்முதலில் பாதிப்பு கண்டறியப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் சிலர் அறிகுறியை மறைத்து தமிழகத்திற்குள் நுழைந்திருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ள அதே சமயம், சிலர் அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி பொது இடங்களில் சுற்றித் திரிவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கவலை தெரிவித்தார். இது போன்ற நடவடிக்கைகளை அரசு இனி ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது எனவும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வெளியில் வந்தால் பாஸ்போர்ட்டுகள் முடக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே நேற்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டார். நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனாலும் பல்வேறு காரணங்களை கூறி சிலர் சாலையில் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை அண்ணாசாலை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரசீத், சாலையில் வருபவர்களை கையெடுத்து கும்பிட்டு தயவு செய்து வெளியே வராதீர்கள் என கோரிக்கை விடுத்தார். மேலும், “உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். வெளியே யாரும் வராதீர்கள். உங்களை வீட்டில் தான் இருக்க சொல்கிறோம். வேறு எதுவும் உங்களிடம் கேட்கவில்லை. தற்செயலாக தெரியாமல் வந்தால் கூட திரும்பி போய் விடுங்கள்” எனக் கும்பிட்டு கேட்டுக்கொண்டார்.