அண்ணாமலை pt web
தமிழ்நாடு

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலக அண்ணாமலை விருப்பம்.. காரணம் என்ன?

சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளின் தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு, மக்கள் சந்திப்பு என மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவிருக்கிறது. மேலும், தங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் பலப்படுத்தும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையிலதான், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சிங்காநல்லூர் விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கு பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

இதுகுறித்து, அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை அருகிலிருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. எனவே, தேர்தல் பணிகளில் என்னால் முழுமையாக ஈடுபட முடியாது. எனவே, சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளின் தேர்தல் பொறுப்புகளிலிருந்தும் விலக விரும்புகிறேன். அதேசமயம், பாஜகவின் பிரசார பணிகளில் ஈடுபட தயாராக உள்ளேன். மேலும், இதுகுறித்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும், மற்ற பாஜக மூத்த தலைவர்களிடமும் பேசியிருக்கிறேன். நான் விலகிய தொகுதிகளுக்கு பாஜக தலைமை வேறொரு பொறுப்பாளர்களை நியமிப்பார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து, ’’இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா’’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, ’’காலம்தான் பதில் சொல்லும்’’ எனவும் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் தேர்தல் பொறுப்புகளிலிருந்து அண்ணாமலை விலகியிருப்பது. என்.டி.ஏ கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.