தமிழ்நாடு

வாழ்க்கை என்பதே ஒரு பரீட்சைதான்; மாணவர்கள் நீட்டை பார்த்து பயப்படக்கூடாது - அண்ணாமலை

Sinekadhara

வாழ்க்கை என்பதே ஒரு பரீட்சைதான். மாணவர்கள் நீட் தேர்வை பார்த்து பயப்படக்கூடாது. ஒழுக்கம், மன உறுதி, கடின உழைப்பு, விடாமுயற்சியோடு படித்தால் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறமுடியும் என நாமக்கல்லில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். 

நாமக்கல் நகர பாஜக மற்றும் தனியார் பள்ளி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் பயிற்சி மையத்தின் சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்புகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நீட் பயிற்சி கையேடுகளை வழங்கி மாணவர்களிடேயே பேசினார். அப்போது, இந்த வருடம் தமிழகத்திற்கு சாதனை வருடம். இந்தியாவில் 18 லட்சம் பேரும், தமிழகத்தில் 1.42 லட்சம் பேரும் நீட் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் இது கடந்தாண்டை காட்டிலும் 30 ஆயிரம் அதிகம் என்றும், இந்தாண்டு முதன்முதலாக தமிழில் 31,300 பேர் நீட் தேர்வு எழுத உள்ளதாகவும், 7 ஆண்டுகளில் இவ்வளவு பேர் நீட் தேர்வு எழுதுவது மருத்துவ படிப்பிற்கு நீட் நம்பிக்கையை அதிகரித்துள்ளதை காட்டுவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நீட் வந்த பிறகுதான் ஒரே தேர்வு எழுதினால் அனைத்து மருத்துவக்கல்லூரியிலும் சேர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நீட் வந்த பிறகுதான் மிகவும் பின்தங்கிய பகுதியில் இருக்கும் மாணவர்களும் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளதாகவும், நீட் மூலம் அனைவருக்கும் சம வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்தாண்டு நீட் எழுதியதில் 58 சதவீதம் என்பது இந்திய அளவில் தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளதாகவும், வாழ்க்கை என்பதே ஒரு பரீட்சைதான். மாணவர்கள் நீட் தேர்வைப் பார்த்து பயப்படக்கூடாது. ஒழுக்கம், மன உறுதி, கடின உழைப்பு, விடாமுயற்சியோடு படித்தால் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறமுடியும் என பேசினார்.