அண்ணாமலை
அண்ணாமலை pt web
தமிழ்நாடு

“பதவி துஷ்பிரயோகம் செய்தவர்களில் ஆ.ராசாவுக்கு 2-ம் இடம்” பத்திரிகையை மேற்கோள் காட்டிபேசிய அண்ணாமலை!

PT WEB

என் மண் என் மக்கள் நடைபயணத்தை உதகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் இருந்து துவங்கிய நடைபயணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஏடிசி திடல் முன்பு நிறைவடைந்தது.

இதனை அடுத்து பொதுமக்களிடையே உரையாற்றிய அண்ணாமலை, “நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும் என ஆளும் கட்சியினர் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இதுநாள் வரை பழங்குடியினர் அந்தஸ்து கிடைக்காமல் படுகர் இன மக்கள் இருக்கின்றனர். பாஜக கண்டிப்பாக படுகர் சமுதாய மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து பெற்றுத் தரும்” என்றார்.

“பாஜக சும்மா இருக்காது”

மேலும் பேசிய அவர், “நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு எந்த தீர்வும் எடுக்காமல் தமிழக அரசு இருந்து வருகிறது. உதகை நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் கடைகளை வைத்திருப்பவர்களுக்கு வாடகை பிரச்னை இன்னும் தீர்த்து வைக்கப்படவில்லை. மார்க்கெட் கடைகளை காலி செய்ய சொன்னால் பாஜக சும்மா இருக்காது. பாஜக பெரும் போராட்டத்தில் ஈடுபட தயாராக இருக்கிறது.

எம்.பி ஆ.ராசா பற்றிய கருத்து

தற்போதுள்ள நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, நீலகிரி மாவட்ட மக்களின் பிரச்னைகள் எதையும் கண்டுகொள்ளாமல் ஒரு சுற்றுலா பயணி போல் நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் வந்துவிட்டு செல்கிறார். உலகத்தில் டைம் பத்திரிக்கை ஆய்வில் தன்னுடைய பதவியை துஷ்பிரயோகம் செய்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் ஆ.ராசா

தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரியில் நீலகிரிக்கு மருத்துவக் கல்லூரி கொடுத்தது பிரதமர் மோடி. இதுவரை தமிழகத்திற்கு முத்ரா திட்டத்தின் கீழ் 1,568 கோடி ரூபாய் கடன் நீலகிரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

“திமுக தீய சக்தி”

நீலகிரி வரையாடுகளை காப்பாற்ற மத்திய அரசு ஒதுக்கி உள்ள நிதியை அதன் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவிலேயே முதன் முறையாக நீலகிரி மலை ரயில் ஹைட்ரஜன் மூலம் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக தீய சக்தியாக இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுக-வை அடியோடு சாய்த்து முடிக்க வேண்டும்.

பாஜக-வை சேர்ந்த வேட்பாளரை வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் நேரடியாக நாடாளுமன்றத்தில் பிரச்னைகளை கூறி மத்திய அரசின் நிதிகளை எளிதில் பெறலாம்” என கூறினார். முன்னதாக அண்ணாமலைக்கு படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி தலைப்பாகை கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது.