Annamalai
Annamalai pt desk
தமிழ்நாடு

“நீங்கள் சொல்வதை நம்புவதற்கு தமிழக மக்கள் ஒன்றும் திமுகவினர் அல்ல”- பிடிஆர் ஆடியோ குறித்து அண்ணாமலை

Kaleel Rahman

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாக பேசி இருந்தார். அந்த ஒலிநாடாவின் உண்மைத் தன்மையை சுதந்திரமான நியாயமான தடையவியல் தணிக்கை செய்யக் கோரி தமிழக பா.ஜ.க. தலைவர்கள் குழு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளது.

PTR

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘இந்த ஒலிநாடா பொய்யானது. யார் குரலில் வேண்டுமானாலும் இப்படி பேசி வெளியிட முடியும்’ என்று சமாளித்துக் கொண்டிருக்கிறார். ஆகவே அந்த ஒலி நாடாவில் பேசிய அதே கருத்துக்களை நான் பேசுவதை போல ஒரு ஒலிநாடாவை வெளியிடுமாறு சவால் விடுகிறேன். என்னுடைய குரல் மாதிரியை ஆய்வுக்கு நான் வழங்க தயார். தமிழக நிதி அமைச்சரும் தனது குரல் மாதிரியை வழங்க வேண்டும். இரண்டு ஒலி மாதிரிகளையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். 2 ஒலி நாடாக்களின் உண்மைத்தன்மையை நீதிமன்றம் விசாரித்து கூறட்டும்.

Udayanithi

காலங்காலமாக பதவிகளை எல்லாம் வாரிசுகள் அனுபவித்துக் கொண்டு தனது கட்சி தொண்டர்களை போஸ்டர் மட்டுமே ஒட்ட வைத்து ஏமாற்றுவது போல... இது அத்தனை எளிதானதல்ல என்பதை தமிழக நிதி அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் சொல்லும் விசித்திர கதைகளை வேறு வழியில்லாமல் உங்கள் கட்சியினர் நம்பலாம். ஆனால், நீங்கள் என்ன கதை சொன்னாலும் நம்புவதற்கு நம் தமிழக மக்கள் ஒன்றும் திமுகவினர் அல்ல. அவர்களின் புத்திசாலித்தனத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று தமிழக நிதி அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறது தமிழக பாஜக குழு. அதன்படி இன்று மாலை பா.ஜ.க. துணைத் தலைவர் கரு.நாகராஜன் வி.பி. துரைசாமி உட்பட நான்கு பேர் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை நேரில் சந்தித்து கோரிக்கையை முன்வைக்க உள்ளனர்.