annamalai
annamalai pt desk
தமிழ்நாடு

“சரித்திர பிழையாகிவிடும்: தமிழக எம்பிக்கள் பாராளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டும்”- அண்ணாமலை

webteam

கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியவற்றின் முழு விவரம்:

“வரும் 28ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டடத்தில் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நம்முடைய செங்கோல் அங்கே செல்ல இருக்கிறது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு 10:45 மணிக்கு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, ஓதுவார்கள் மற்றும் நாதஸ்வர வித்வான்கள் எல்லாம் அதனை எடுத்துச் சென்று மவுண்பேட்டனிடம் கொடுத்து வாங்கி மீண்டும் நேருவிடம் கொடுத்து மக்களாட்சியாக அது வந்துள்ளது.

அதன்பின் அந்த செங்கோலை நாம் எங்கும் பார்த்தது கிடையாது. தற்போது அந்த செங்கோல் பாராளுமன்றத்தில் இருக்கப் போகிறது. வருகின்ற காலத்தில் செங்கோல் இல்லாமல் ஆட்சி இல்லை என்ற அளவிற்கு பிரதமர் பெருமை சேர்த்துள்ளார். இதனை கடந்த சில தினங்களாக எதிர்க்கட்சியினர் அரசியலாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதீனமே விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து எம்பி-களும் புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டும். இந்த பாராளுமன்ற கட்டடம் புதிதாக வரக்கூடிய எம்பி-களுக்கும் சேர்த்தே விசாலமாக கட்டப்பட்டுள்ளது.

Senthil Balaji

இது போன்ற ஒன்று, நூறு வருடங்கள் கழித்தாலும் கிடைக்காது. எம்பிக்கள் இதில் பங்கேற்கவில்லை என்றால் இது ஒரு சரித்திர பிழையாக மாறிவிடும். எந்த ஒரு அரசியலையும் சாராதவர் நம் பிரதமர். அவர் ஒரு கட்சியை சார்ந்திருந்தாலும், பிரதமர் என்கிற அந்த வார்த்தை அரசியல் கட்சியை தாண்டி இருக்கக்கூடிய ஒரு வார்த்தை. தற்போது உள்ள எதிர்க்கட்சியினர் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். தமிழகத்தில் தற்போது மிகப்பெரிய அளவில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது தான். அவர்கள் தவறு செய்து இருக்கிறார்கள். அதனால் சோதனை நடைபெறுகிறது.

முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது கரூர் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என அவரை கூறியுள்ளார், அதுமட்டுமின்றி அவரது சகோதரர் அசோக்கின் பெயரையும் கூறிவிட்டு வந்துள்ளார். தற்போது திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்தவுடன் அவர் ஒரு புண்ணியவான் என்று ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். இதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த சோதனையானது இறுதி கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு. பீகாரில் எல்லாம் சோதனை நடைபெற்ற போது யாருக்கும் ஒரு கீறல் கூட விழவில்லை. ஆனால், கரூரில் சோதனைக்குச் சென்ற அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முழு பொறுப்பையும் திமுக தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

புதிய நாடாளுமன்ற கட்டடம்

தங்களிடம் கூறிவிட்டு வந்திருக்க வேண்டும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகிறார். அவர்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். ‘எங்காவது சோதனைக்கு செல்வதை கூறிவிட்டு வருவார்களா?’. எனக்கு கிடைத்த தகவலின்படி கரூரில் சோதனை மேற்கொண்டு 1 மணி நேரம் 12 நிமிடம் கழித்து தான் காவல்துறையினர் அங்கு சென்றுள்ளார்கள். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என்பது இந்தியாவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இப்படியான ஆட்சியில் முதலமைச்சர், சட்டமன்றம் எவ்வாறு உள்ளது என்பதை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.பாரதி மீண்டும் என்னை வம்புக்கு இழுத்துள்ளார். ஒரு பக்கம் அண்ணாமலை சாதாரண ஆள் என்று கூறிவிட்டு சோதனை என்று வரும்போது அதற்கும் அண்ணாமலை தன் காரணம் என்று கூறுகிறார்.

பிடிஆரின் ஆடியோ விவகாரத்தில் ஏதேனும் விவாதத்தை முன் வைத்தீர்களா? அப்போதெல்லாம் எதுவும் கூறாமல் செந்தில் பாலாஜி என்று வரும்போது விவாதம் செய்தால்... யாரிடம் பணம் இருக்கிறதோ, அவர்களுக்குதான் திமுகவில் மரியாதைபோல என்று மக்களுக்கு புரியும்

ஆர்.எஸ்.பாரதி கூறியதற்கான பதில் 2024-ல் இருக்கும்.

இருமொழிக் கொள்கையை பற்றி என்னுடைய கருத்தில் முரண்பாடு உள்ளது என்று கூறும் அமைச்சர் பொன்முடி, அதுகுறித்து நான் விவாதத்திற்கு வரவேண்டும் என்று கூறி இருக்கிறார். மருத்துவக் கல்வி பொறியியல் கல்வி எல்லாம் தாய் மொழியில் மாறி வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் மாறவேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் வழி பொறியியல் கல்வியை நிறுத்தி உள்ளார்கள். இதை கண்டித்து அறிக்கை அளித்த பின்பு தங்களுக்கு தெரியாமல் இதை அறிவித்து விட்டார்கள் என திமுகவினர் கூறுகிறார்கள். அமைச்சர் பொன்முடி பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.

New Parliament and Modi

இதில், தமிழக அரசுக்கு உள்நோக்கம் உள்ளது. இதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் பொன்முடியின் மகன் எந்த பள்ளியில் படித்தார். அது இருமொழியா? மும்மொழியா? உங்களது பேரன் பேத்தி எந்த பள்ளியில் படிக்கிறார்கள். அவை இருமொழியா? மும்மொழியா? முதலமைச்சரின் பேரன் பேத்திகள் படிப்பது இருமொழி பள்ளியா? மும்மொழி பள்ளியா? எனவே என்னுடன் விவாதத்திற்கு வரும்போது அனைத்தையும் தயார் செய்துவிட்டு வாருங்கள். உங்களுடைய குடும்பத்தினர் மட்டும் பல மொழிகளை கற்றுக்கொண்டு உலகத்தை ஆள வேண்டும். உங்களுடன் விவாதத்திற்கு வருவதற்கு நான் தயார் நேரத்தையும் இடத்தையும் கூறுங்கள் நான் விவாதத்திற்கு வருகிறேன். அனைத்தையும் விவாதிப்போம்; அனைத்தையும் தோலுரித்துக் காட்டுவோம்.

முதலமைச்சர் வெளிநாடு செல்ல வேண்டும்தான். அதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது. அதே சமயம் வெளிநாடு சென்று விட்டு வரும்போது எதனைக் கொண்டு வந்திருக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். இதற்கு முன் அவர் துபாய் சென்று வந்தது குறித்தும் பல்வேறு அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தது குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு என்னென்ன திட்டங்கள் வந்துள்ளது என்பதை கூறுங்கள். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு உங்களுடைய திட்டங்கள் என்ன என்பதை கூறுங்கள்.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் 50 சதவீத முதலீடு ஒரு மாநிலத்திற்குச் செல்கிறது. பல்வேறு மாநிலங்கள் முன்னேறி வருகிறது. நம்முடைய வேகம் குறைந்துள்ளது. எனவே முதலமைச்சரின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். உதயநிதி பவுண்டேஷன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் எல்லாம் பணமோசடிகள். திமுக வந்த பிறகு பல்வேறு விஷயங்களை பணமோசடிகளாக மாற்றி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் இந்த வருமான வரித்துறை சோதனை இரு நாட்களில் முடிவதுபோல் தெரியவில்லை. தமிழகம் தற்போது இந்தியாவில் நான்காவது பொருளாதார மாநிலமாக உள்ளது. இந்நிலையில் மதுவிற்கு அடிமையாகி வந்தால் பஞ்சாப்பை போல் மதுவிற்கு அடிமையான மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும். அதேபோல் நடைபெறுகின்ற சோதனைகளுக்கு என் மீது பழி போடுவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.

pen memorial

தமிழ்நாட்டையே சாராய மாநிலமாக மாற்றி இருக்கக்கூடிய ஒரு அமைச்சர் சோதனையை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. வருமான வரித்துறை அறிக்கை வெளியிடும் வரை நாம் பொறுத்திருக்கலாம்.

2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதத்திற்குள் மாற்றிவிடுமாறு பிரதமர் கூறினால், அது டிராமா என சொல்கிறார்கள். பாராளுமன்றத்தில் செங்கோலை வைத்தால் அதனையும் பாஜகவின் டிராமா எனக் கூறுகிறார்கள். அதேபோல் தற்போது சோதனை நடைபெற்றால் அதனையும் டிராமா எனக் கூறுகிறார்கள். அப்படியென்றால் நீங்கள் எதை செய்தீர்கள் என மக்களிடம் தெரிவியுங்கள்.

ஆவின் குறித்து முதலமைச்சர் எழுதிய கடிதம் ஒரு டிராமா என நான் கூறுகிறேன். ஏனென்றால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பால் வாங்கும் அளவு 35 லட்சத்திலிருந்து 32 லட்சமாக குறைந்துள்ளது. தற்போது பால்வளத்துறை அமைச்சர் உள்ளார்கள். ஆவினின் செயல்பாடு குறையை மறைப்பதற்காக அமுல் மீது பழி சுமத்துவதுதான் டிராமாவே தவிர, நாங்கள் செய்வது டிராமா இல்லை.

செங்கோலில் சோழர் காலத்து தமிழ் எழுத்துகள் இல்லை. அது தற்போதுள்ள நடைமுறை தமிழ் எழுத்துகள் தான் என கருத்துகள் பரப்பப்பட்டு வருவது குறித்து கேட்கப்படுகிறது. அது மிகவும் நல்லது தான், அனைவருக்கும் புரியக்கூடிய எழுத்துகள் அதில் இருந்தால் அதனை பார்த்து படிக்கலாம்.

எனது ‘என் மண் என் மக்கள்’ என்ற பயணம் ஜூலை ஒன்பதாம் தேதி துவங்க உள்ளது. அந்த பயணத்தில் ஊழலை பற்றி மட்டும்தான் பேச உள்ளோம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குச் செல்லும் போதும் அங்குள்ள திமுகவின் ஊழலை பற்றி தான் பேசப் போகிறோம். திமுக பைல்ஸ் 2-ல் திமுகவை சேர்ந்தவர்களும் திமுகவை சாராதவர்களும் இருக்கிறார்கள்.

கஷ்டப்பட்டு ஒவ்வொருவரும் இன்ஜினியர் மருத்துவரானால், கலைஞரின் பேனா மையில் தான் மருத்துவரானார், கலைஞரின் பேனா மையில் தான் இன்ஜினியரானார் என ஏன் கூறுகிறீர்கள்? அதேபோல் நான் ஒன்று கேட்கிறேன். கலைஞரின் குடும்பத்தில் பிறந்தவர்கள் எத்தனை பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆனார்கள்? திமுகவின் அரசியலே வட இந்தியர்கள், தென் இந்தியர்கள் என உள்ளது. தற்போதுள்ள தமிழர்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகவில்லை என்றால் எப்படி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்வார்கள்? கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை பூதக்கண்ணாடி கொண்டு தேடும் நிலைமை உள்ளது. இன்னும் சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் பத்துக்கு ஒன்பது பேர் வட இந்திய அதிகாரிகளாக இருப்பார்கள்.

CM M.K. Stalin

பழைய சோறு டாட்-காம் விவகாரம் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. எங்கெல்லாம் விதிமுறைகளை மீறி பார்கள் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் முற்றுகை இடுவோம் என கோவை மாவட்ட பாஜக தெரிவித்துள்ளது. ஜூன் 10ஆம் தேதிக்குள் பாஜக சார்பில் வெள்ளை அறிக்கை அளிக்க உள்ளோம். அந்த வெள்ளை அறிக்கையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான திட்டங்கள், 75 சதவீத டாஸ்மாக்கை மூடுவது, கள் மூலமாக வரக்கூடிய வருமானம் வருமான இழப்பை சரி செய்வது அனைத்தையும் நாம் கூறியுள்ளோம். அதை வைத்து ஒரு விவாதம் நடக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. திமுக பைல்ஸ் 2-வை கோவையில் வெளியிடுவோம். என்னை எந்த அரசியலில் கட்சி இருக்கக் கூறுகிறதோ ஒரு ரூபாய் பணம் கூட அளிக்காமல் தேர்தலில் நிற்பேன்.

தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் ஊழலை சுட்டிக் காட்டுவது போல் ஆட்சியில் இருந்தவர்கள் செய்ததையும் கூற வேண்டிய கடமை உள்ளது” என்றார்.

தொடர்ந்து அவரிடம் ஹிஜாப் அணியக்கூடாது என மருத்துவரை பாஜகவினர் மிரட்டியதாக வந்த செய்தி குறித்து எழுப்பிய கேள்விக்கு, “பத்திரிகையில் வந்திருக்கக்கூடிய செய்தி தவறானது, இருதரப்பினரின் விளக்கத்தையும் நாம் கேட்க வேண்டும். இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு உரிமை உள்ளது அதனை கேட்பதற்கு பாஜகவிற்கு உரிமை இல்லை. இங்கு நடந்திருக்கக் கூடிய சம்பவம் என்பது, வேறு. அங்கிருந்தவர் ஹிஜாப் பற்றி பேசவில்லை ஏன் தாமதமாக மருத்துவர்கள் வந்தார்கள் என்றுதான் கேள்வி எழுப்பியுள்ளார். பிறகு அது அரசியல் சண்டையாக மாறியுள்ளது” என்றார்.