அண்ணாமலை தலைமையில் புதிய அரசியல் கட்சி தமிழ்நாட்டில் உருவாகிறது. இதுகுறித்தான முக்கிய அறிவிப்பை அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, பாஜக தலைமையிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்திருந்த நிலையில், இன்று 12 மணிக்கு சமூக வலைதளங்களில் சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என தெரிவித்திருந்தார். இதற்கிடையில் தான், அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்கப்படுவதாக இன்று காலை பாஜக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி சமூக வலைதளங்களில் 12 மணிக்கு நேரலையில் வந்த அண்ணாமலை புதிய அரசியல் கட்சித் தொடங்குவதாக அறிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, பாஜகவில் பயணித்தது குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் அழைத்தது குறித்து பல்வேறு சம்பவங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், ”தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை; தமிழ்நாடு குறித்த தனது பார்வையும் பாஜக மூத்த தலைவர்களின் பார்வையும் ஒன்றாகவில்லை. 18 மாதங்களாக எனது அதிருப்தியை தெரிவித்து வந்தேன். எனது கருத்துக்கு தலைமை செவி சாய்க்கவில்லை. எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. ஒரு புதிய அரசியலை அடிப்படை கட்டமைப்பை மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டுமென்று பாஜகவில் இருந்து வெளியேறி வருகிறேன்.
டிசம்பர் 4, 2025 அன்றே பாஜகவில் இருந்து வெளியே செல்லவிருக்கிறேன் என கட்சியிடம் தெரிவித்தேன். தேர்தல் பணியை முடித்துவிட்டு செல்லுங்கள் என தெரிவித்தனர். கட்சியின் உண்மைத் தொண்டனான அதனை செய்தேன்.
தற்போது, ஆனந்தமாக.. அன்போடு தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை நாம் தொடங்க இருக்கிறோம். கண்டிப்பாக அடுத்து நடக்கக்கூடிய தமிழகத்தின் பொதுத்தேர்தலில் நம் கட்சி போட்டியிடும். முதலில் இயக்கமாக அனைவரையும் உள்ளே கொண்டு வந்து, பிறகு அரசியல் சொல்லிக்கொடுத்து கட்சியாக மாற்றுவேன். நான் தொடங்கவுள்ள தனி இயக்கம் தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத் தேர்தலில் கட்சியாக போட்டியிடும். சிறந்த மூளைகளை அரசியலுக்கு கொண்டுவருவேன்; அதற்கு சிறிதுகாலம் அவகாசம் தேவை. அனைவருக்கும் அரசியல் வாய்ப்பு கொடுக்க வேண்டும்; புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்; நாம் செய்யப்போவது சாதாரண வேலை அல்ல; மிகப்பெரிய விஷயம்; கொஞ்சம் பொறுமை தேவை. தமிழ்நாட்டின் அரசியல் மொழி, இலக்கணத்தை மாற்ற வேண்டும் என்பதே விருப்பம். சமசரமில்லாத கொள்கை கொண்ட இயக்கமாக வழிநடத்துவதே என் இலக்கு” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ரஜினிகாந்த் இயக்கத்தில் உரையாற்றியிருந்த அவர், ரஜினிகாந்த் 2020-ம் ஆண்டு தன்னை அவரது கட்சியில் சேர அழைத்ததார். ஆனால், அவர் அரசியல் இயக்கம் ஆரம்பிப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதாக இருந்தாலும், கொரானா காலத்தில் அரசியல் கட்சி ஆரம்பிப்பது அவருக்கு நல்லதல்ல.எனவே, அவரது அழைப்பை மறுத்ததுடன் பாஜகவில் இணைவதை அவரிடம் தெளிவாக விளக்கியிருக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, தான் தொடங்கியிருக்கும் இயக்கத்திற்கான லிங்க்-ஐ அன்ணாமலை கொடுத்த நிலையில், அதில் சில நிமிடங்களிலேயே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களை இணைத்து வருகின்றனர்.