தமிழ்நாடு

பாஜக கூட்டத்தில் நாற்காலி பறக்க நடந்த மோதல்: மாவட்ட துணை தலைவர் மீது அண்ணாமலை நடவடிக்கை

webteam

கடந்த 6 ஆம் தேதி சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பாஜக மாவட்ட துணை தலைவர் ரவி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் கடந்த 6 ஆம் தேதி பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில் முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரத்தின் ஆதரவாளர் ரவி மற்றும் புதிய மாவட்ட தலைவர் அருள் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி இருதரப்பினரிடையே கைகலப்பாக மாறியதில் பாஜக நிர்வாகிகள்ஒருவருக்கொருவர் நாற்காலிகளை வீசி தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்ட துணை தலைவர் ஆரூர் ரவி கட்சியின் கட்டுப்பாட்டை மீறியுள்ளார். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இதனால் அவர் பொறுப்பில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார்” என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.