நீட் தேர்வு முறையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாணவி அனிதா, மாநில பாடத்திட்டத்தில் தமிழ வழியில் பயின்று பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டும் என்பது இவரது ஆசை. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் 196.5 கட் ஆப் பெற்று இருந்ததால் நிச்சயம் மருத்துவ இடம் கிடைக்கும் என்று நம்பினார்.
ஆனால், மத்திய அரசு நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவர் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்துவிட்டது. மத்திய அரசின் இந்த முடிவினை எதிர்த்து மாணவி அனிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது.
இந்நிலையில், மாணவி அனிதா தனது வீட்டில் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து அரியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு முறையால் மருத்துவ இடம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் அனிதா தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
மாணவி அனிதாவின் தற்கொலை மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.