தமிழ்நாடு

அனிதா தற்கொலை: தமிழகம் முழுவதும் போராட்டம்

அனிதா தற்கொலை: தமிழகம் முழுவதும் போராட்டம்

webteam

அனிதாவின் தற்கொலையை அடுத்து தமிழகம் முழுவதும் நீட் தேர்விற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது.

அரியலூர் மாணவி அனிதா, நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை என மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. 

அதன்படி சேலம், கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் முக்கிய இடங்களில் மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பிலும் பல இடங்களில் போரட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அனைத்து இடங்களிலும் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், திண்டுக்கல், வேலூர், மதுரை, நெல்லை மாவட்டங்களிலும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாளையங்கோட்டையில் நாம் தமிழர் கட்சியினர் ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இன்று பிற்பகலில் மாணவி அனிதாவின் இறுதிச்சடங்குகள் நடைபெறுவதால், ஏராளமான பொதுமக்கள் திரண்டு அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க உள்ளனர்.