தமிழ்நாடு

நொடிப்பொழுதில் ஓடிமறைந்த சிறுத்தை: சிசிடிவி காட்சிகளால் கிராம மக்கள் அச்சம்!

webteam

பல்லடம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வெளியான சிசிடிவி காட்சியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரடிவாவி கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள நந்தவன தோட்டம் என்ற இடத்தில் நேற்று சிறுத்தை நடமாடியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறுத்தையை நேரில் பார்த்த மக்கள் கூறுகையில், “நள்ளிரவில் தோட்டத்தின் வழியாக ஒரு விலங்கு வேகமாக சென்றதை பார்த்தோம். அது கண்ணிமைக்கும் நேரத்தில் நந்தவன குட்டைக்குள் அது சென்று விட்டது” என தெரிவித்தனர்.

இதையடுத்து சந்தேகமடைந்த கிராம மக்கள் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் சிறுத்தை உருவம் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்த கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். தங்கள் பாதுகாப்புக்கு அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் கேட்டு வருகின்றனர்.