தமிழ்நாடு

சிவகங்கைளில் பழங்கால நவகண்ட சிலை, செய்யாறில் நீள வடிவ தொட்டி, பானைகள் கண்டெடுப்பு

kaleelrahman

சிவகங்கைளில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிலையும், செய்யாறில் நீள வடிவ தொட்டியும் பானைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

சிவகங்கையை அடுத்துள்ள முத்துப்பட்டியில் சங்கையா என்பவருக்கு சொந்தமான பட்டா இடத்தில் கிணறு வெட்டும்போது, 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்த சிவகங்கை தொல் நடைக்குழு சம்பவ இடத்திற்குச் சென்று சிலையை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து நிலத்தின் உரிமையாளர் நவகண்ட சிலையை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில், சிவகங்கை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். சிலையை அரசிடம் ஒப்படைத்த சங்கையாவிற்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கி சால்வை அணிவித்து கௌரவித்தார்.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியம் தண்டரை கிராமத்தில் சேகர் என்பவரது நிலத்தில் அரசு மூலம் பண்ணை குட்டை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அப்போது நீள வடிவிலான தொட்டி, இரண்டு கருப்பு பாகைளும் செம்மண் நிறத்தில் ஒருபானையும் இருந்தது. இதுகுறித்து வருவாய்த் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து நீள வடிவில்தொட்டியும், சாதாரண மண் பானைகளும் இருப்பதும் தெரியவந்தது. சேதமடைந்த 3 பானைகளும், நீள வடிவிலான சேதமடைந்த தொட்டியும் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டது. பூமிக்கடியில் கிடைத்த நீளவடிவிலான தொட்டியும் 3 பானைகளும் எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்து கண்டறிய வருவாய்த் துறையினர் வேலூரில் செயல்பட்டு வரும் தொல்லியல் துறை அருங்காட்சியகத்திற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.