தமிழ்நாடு

களைகட்டத் துவங்கிய நெத்திலி மீன் சீசன்- அதிக விலை கிடைப்பதால் குளச்சல் மீனவர்கள் மகிழ்ச்சி

webteam

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நெத்திலி மீன் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 4000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாத நிலையில், பைபர் படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் நிலவி வந்த மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்கு கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்து வந்தனர்.

இதையடுத்து தற்போது குளச்சல், முட்டம் மண்டைக்காடு, குறும்பனை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 2000-க்கும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பியுள்ளனர். இந்நிலையில் அவர்களது படகில் அதிக அளவில் நெத்திலி மீன்கள் பிடிபட்டிருந்தது.

இதை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி குவிந்ததால் ஒரு பாக்ஸ் நெத்திலி மீன் ரூ.1200 முதல் ரூ.1500 வரை விலை போனது இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.