சென்னை உயர்நீதிமன்றம் முகநூல்
தமிழ்நாடு

ஆனந்த விகடன் இணையதள முடக்க விவகாரம் | மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது..

PT WEB

செய்தியாளர்: V.M.சுப்பையா

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அருகில் பிரதமர் நரேந்திர மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பதைப் போன்று கார்ட்டூன் ஒன்று விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியிடப்பட்டது. இந்த கார்ட்டூன் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், விகடனின் இணையதளம் (www.vikatan.com) கடந்த மாதம் 15-ம் தேதி முடக்கப்பட்டது.

விகடன் குழுமம்

இந்நிலையில், தொலைத்தொடர்புத் துறைக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி, விகடன் பத்திரிகையின் இணையதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்பு நடைபெற்றது.

ஆனந்த விகடன் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதிட்டார். இது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், இந்திய இறையாண்மைக்கு எதிரானது என வாதிட்டார்.. வழக்கை விசாரித்த நீதிபதி, இணையதளம் முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் சம்பந்தப்பட்ட கார்ட்டூனை பிளாக் செய்யுமாறு நிறுவனத்துக்கும் அறிவுறுத்தி உள்ளார்..