மூதாட்டி
மூதாட்டி  pt wep
தமிழ்நாடு

"ஒளிஞ்சி ஒளிஞ்சி உன்னோட படம் பார்த்தேனே கருப்புசாமி"-விஜயகாந்த் போஸ்டரை பார்த்து கதறி அழுத மூதாட்டி!

PT WEB

தமிழ் திரையுலகில் "இனிக்கும் இளமை" என்ற படத்தில் அறிமுகமாகி 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, தனக்கான அடையாளத்தை அமைத்துக்கொண்டவர் விஜயகாந்த். படிப்படியாக முன்னேறி மிகச்சிறந்த நடிகராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர், தேமுதிக தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முதல் எதிர்க் கட்சித்தலைவர் வரை படிப்படியாக உயர்ந்து வந்தார்.

மேலும் அனைவரிடமும் மிக எளிமையாகப் பழகக்கூடிய பண்பு கொண்டவர். திரைத்துறையில் நடிகர்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தியவர். அரசியல் பொதுவாழ்வில் பல்வேறு எதிர்ப்புக்களைக் கடந்து இறுதி வரை மக்கள் நலனுக்காகவே வாழ்ந்து மறைந்தவர். தமிழக அரசியல் களத்தில் ஒரு ஆளுமைமிக்க அரசியல்வாதியாக இருந்தவர். இவருடைய பெருமைகள், சாதனைகள் மற்றும் அவரின் மனிதநேயம் என அனைத்தும் இன்றுவரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.

இந்தநிலையில், தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். திரைப் பிரபலங்களும் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாகத் தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிக கட்சி தொண்டர்கள் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு,அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கதறிய மூதாட்டி

அதன் ஒரு பகுதியாகக் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நான்கு முனைசந்திப்பில் உடல் நலக்குறைவால் காலமான தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருவப்படத்திற்கு தேமுதிக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அப்போது அந்த பகுதியில் பேருந்துக்காகக் காத்திருந்த மூதாட்டி ஒருவர் விஜயகாந்தின் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு அங்கு வந்து கதறி அழுதது மட்டும் இல்லாமல் கிராமிய துக்க பாடல் பாணியில் ஒப்பாரி வைத்து அழுதுள்ளார். மூதாட்டி கண்ணீர் விட்டுக் கதறிய சம்பவம் அங்கிருந்த தேமுதிக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்த மூதாட்டியைச் சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.