தமிழ்நாடு

வறுமை காரணமாக வயதான தம்பதி தற்கொலை - ராமநாதபுரத்தில் சோகம்

webteam

வறுமை காரணமாக வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஆண்டிச்சியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி(55). அவரது மனைவி செல்லம்மாள் (50). கணவன்-மனைவி இருவரும் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விவசாயத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர். 

இதில் மனைவி செல்லம்மாள் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் விஷம் குடித்த முனிசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் முனியசாமியின் உடல் கவலைக்கிடமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் முனியசாமி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இது குறித்து முதுகுளத்தூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்து உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகிறார். வயதான கணவன்-மனைவி இறந்தது அக்கிராமத்தில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணையில் தம்பதிகள் இருவரும் கடும் வறுமையால் உடல் நிலை பாதிக்கபட்டு, தனியாக வசித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவா்களை இரண்டு மகன்களும் உணவு அளித்து முறையாக பராமாரிக்க முன்வராததால் விரக்தியடைந்து மன உளைச்சலால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.