தமிழ்நாடு

துப்பாக்கிக்குண்டு பாய்ந்து சிறுவன் மரணம் - விசாரணை அறிக்கை தாக்கல்

JustinDurai

துப்பாக்கிக்குண்டு பாய்ந்து சிறுவன் இறந்தது தொடர்பான கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கை, மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் துப்பாக்கிச்சூடு பயிற்சி எடுத்தபோது, துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு ஒன்று புகழேந்தி என்ற 11 வயது சிறுவனின் தலையில் பாய்ந்தது. குண்டடிபட்ட சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலையில் ஆழமாக துப்பாக்கிக் குண்டு புகுந்ததால் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த நிலையில், துப்பாக்கிக்குண்டு பாய்ந்து சிறுவன் இறந்தது தொடர்பான கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கை, மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழிலக பாதுகாப்புப்படையினர், தமிழக காவல்துறையினரிடம் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி விசாரணை நடத்தியிருந்தார். கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை ஆட்சியர் மேற்கொள்ள உள்ளார். துப்பாக்கிச்சுடும் பயிற்சித் தளத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.