தமிழ்நாடு

நீச்சல் தெரியாத நண்பனை ஏரிக்குள் இறக்கியதால் விபரீதம்-மாணவன் பலியான பகீர் வீடியோ காட்சிகள்

webteam

செம்பரம்பாக்கம் ஏரியில் நீச்சல் தெரியாத மாணவனை நண்பன் ஒருவன் வலுக்கட்டயமாக ஏரிக்குள் இறக்கியதால் நீரில் மூழ்கி அப்பாவி மாணவன் உயிரிழந்தான். மாணவன் நீரில் மூழ்கி உயிரிழக்கும் காட்சிகள் வெளியாகி கடும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயதான ஜெகதீசன். இவர் கோவூர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர்களான சூர்யா, யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக சென்றவர் நீச்சல் தெரியாத காரணத்தால் ஏரிக்கரையில் உள்ள படியில் அமர்ந்து குளித்து கொண்டிருந்தார். அவரது நண்பர் சூர்யா நீச்சல் அடித்தபடி குளித்து கொண்டிருந்தார். இந்நிலையில் சூர்யா, ஜெகதீசனை நீச்சல் அடிக்கும்படி ஏரியில் இறக்கியுள்ளார்.

அப்போது நீச்சல் தெரியாத ஜெகதீசன் எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கினார். அவரை மீட்க சூர்யா போராடிய போது அவரால் ஜெகதீசனை மீட்க முடியவில்லை. உடனடியாக இது குறித்து குன்றத்தூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய ஜெகதீசனை தீவிரமாக தேடினர்.

ஆனால் சில மணி நேரங்களுக்கு பின்பு இறந்த நிலையில் ஜெகதீசன் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நீச்சல் தெரியாமல் ஏரியில் மூழ்கி ஜெகதீசன் இறந்து போன பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முழு கொள்ளளவை நெருங்கி வரும் செம்பரம்பாக்கம் ஏரி கடல் போல் காட்சியளிக்கும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் ஏரிக்குள் செல்லும் வாயில்கள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் குளிக்க அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது..