தமிழ்நாடு

கரூர்: காங்கிரஸ் பிரமுகரின் வீட்டில் நூதன முறையில் கார் திருட்டு

JustinDurai
கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் பிரமுகரின் பெயரைக்கூறி, அவரது வீட்டிலிருந்த காரை 2 நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரணியமங்கலம் - வளையப்பட்டியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் வெங்கடாசலம் வயலுக்குச் சென்றிருந்தபோது, வீட்டில் அவரது மகள் மட்டும் இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குச் சென்ற 2 பேர், வெங்கடாசலம் அனுப்பியதாகக் கூறி சாவியை வாங்கிக் கொண்டு, அங்கிருந்த காரை எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்பிய வெங்கடாசலம் கார் அங்கு இல்லாததைக் கண்டு கேட்டபோது, கார் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது.
புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், நச்சலூர் என்ற இடத்தில் தாறுமாறாக ஓடிய காரைக் கண்டுபிடித்து பின்தொடர்ந்தனர். காவல்துறையினரைப் பார்த்ததும் அதிலிருந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். ஒரு மணி நேரத்தில் காரை மீட்ட காவல் துறையினர், திருடர்களை தேடி வருகின்றனர்.