தமிழ்நாடு

சிஏஏவுக்கு எதிரான திமுக பேரணி: பங்கேற்க சென்னை வந்த 85 வயது நாராயணப்பா..!

jagadeesh

திமுக இன்று நடத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க ஓசூரில் இருந்து சென்னை வந்துள்ளார் 85 வயதான நாராயணப்பா.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி இன்னும் சற்று நேரத்தில் சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து தொடங்க உள்ளது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். அங்கு சுமார் 5000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரணி ஒன்றரை கிலோ மீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் பேரணியில் பங்கேற்க ஓசூரைச் சேர்ந்த 85 வயதான நாராயணப்பா சென்னை வந்துள்ளார். இது குறித்து கூறிய அவர் "நான் சிறுவயதில் இருந்தே திமுகவின் தொண்டன். என் இறுதி மூச்சு இருக்கும் வரை இந்தப் போராட்டத்தில் பங்கேற்பேன்”என தெரிவித்தார்.

முன்னதாக குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில் இன்று நடைபெறும் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகளின் பேரணிக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை மீறி பேரணி நடைபெற்றால் அதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.