தமிழ்நாடு

மின்னணு இயந்திரத்தில் புகைப்படம் மறைக்கப்பட்டதாக புகார்: தர்ணாவில் ஈடுபட்ட அமமுக வேட்பாளர்

kaleelrahman

அமமுக வேட்பாளரின் புகைப்படம் மறைக்கப்பட்டதாகக் கூறி அமமுக வேட்பாளர் வாக்குச்சாவடி மையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் இரண்டுமணி நேரம் தேர்தல் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தனி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கடைவீதி சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 178-ல் வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 7-ல் அமமுக வேட்பாளர் மாதேஸ்வரன் புகைப்படம் மறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வாக்குச்சாவடி மையத்தில் இருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக முகவர்கள் இதுகுறித்து வாக்குச்சாவடியின் மண்டல துணை அலுவலர் பிரவீன்ராஜுடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் அமமுக வேட்பாளர் மாதேஸ்வரன் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.

மேலும் இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஏன் தெரிவிக்கவில்லை ? என்று கேள்வி எழுப்பி வாக்கு மையத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இதனால் இரண்டு மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.