தமிழ்நாடு

திமுகவில் இணைந்த அமமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்

webteam

அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதியின் சகோதரர் பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்துள்ளார். 

அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் டிடிவி தினகரன் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சபாநாயகர் அவர்களுக்கு நோட்டீஸும் அனுப்பினார். ஆனால் டிடிவி தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்ததும் நாங்கள் அவருடன் தொடர்பில் இல்லை எனவும் தற்போது வரை அதிமுகவில் தான் இருக்கிறோம், இருப்போம் என மூவரும் தெரிவித்தனர். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவும் தெரிவித்தனர். 

இதனிடையே அமமுகவில் இருந்த செந்தில்பாலாஜி, கலைராஜன், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இதையடுத்து கரூர் மாவட்ட செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர் என அவர்களுக்கு திமுகவில் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து எம்.ஜி.ஆர் தொண்டர்கள் திமுகவிற்கு வர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் தற்போது திமுகவின் வியூகம் புதுக்கோட்டை பக்கம் திரும்பியுள்ளது. அமமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளரும் அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதியின் சகோதரருமான பரணி கார்த்திகேயன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.