தமிழ்நாடு

கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட அம்மன் சிலை - கடத்தல் கும்பலின் பதுக்கல் ?

webteam

கும்பகோணத்தில் கழிவு நீர்க் கால்வாயில் இருந்து ஆண்டாள் அம்மன் உலோக சிலை மீட்கப்பட்டது.

கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். ஓலைப் பட்டினம் வாய்க்காலில் இன்று காலை துப்புறவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கால்வாயில் சாக்குப் பை ஒன்று கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டனர். அதை பிரித்து பார்த்தபோது, சுமார் 2 அடி உயரமுள்ள ஆண்டாள் அம்மன் உலோக சிலை இருந்தது. இதையடுத்து தங்களின் மேல் அதிகாரிக்கு துப்புறவு பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர். 

பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல் அறிந்து சென்று சிலையை பெற்றுச் சென்றனர். சிலையை கடத்தியவர்கள் மறைத்து வைப்பதற்காக சாக்கு மூட்டையில் கட்டி கழிவு நீர்க் கால்வாயில் மறைத்து வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த சிலை எங்கிருந்து கடத்தப்பட்டது என்றும், பதுக்கியது யார் என்றும் விசாரித்து வருகின்றனர்.