திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வந்த அம்மா உணவகம் கஜா புயலில் சிக்கி பத்து மாதங்களாக பூட்டப்பட்டிருந்த நிலையில் புதிய தலைமுறை செய்தியின் எதிரொலி காரணமாக இன்று மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்ததுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அம்மா உணவகம் கட்டப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக இந்த அம்மா உணவகம் மூலமாக அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உறவினர்கள், விவசாயிகள், ஏழை எளியோர்கள் குறைந்த விலையில் காலை, மதிய உணவுகளை வாங்கிப் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலினால் இந்த அம்மா உணவகத்தின் மேற்கூரைகள் பெயர்ந்து சின்னாபின்னமாகின. தமிழ்நாடு அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைத்து தந்தாலும், இந்த அம்மா உணவகம் சீரமைக்கப்படாமலும், பயன்பாட்டுக்கு வராமலும் பத்து மாதங்கள் ஆகிய நிலையில் உணவகத்தில் உள்ள பொருட்கள் பராமரிக்கப்படாமலும், சமையல் பாத்திரங்கள் வீணான நிலையிலும் இருந்தது. மேலும் இந்த பத்து மாத காலமாக இதில் பணிபுரியும் பணியாளர்களும் வேலையின்றி தவித்து வந்தனர்.
இந்நிலையில், எளிய மக்கள் பயன்பாட்டுக்காக இந்த உணவகத்தை விரைந்து திறக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு புதிய தலைமுறையில் செய்தியாக வெளியாகியது. அதன் எதிரொலியாக இன்று அம்மா உணவகம் பொதுமக்கள், உணவகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அணைவரும் பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர், மேலும் அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களும், பொது மக்களும் புதிய தலைமுறை செய்த்திக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.