தமிழ்நாடு

ஆம்பூர்: திடீரென தீப்பற்றி எரிந்த பழைய பொருட்கள் குடோன்– போலீசார் விசாரணை

webteam

ஆம்பூரில் தனியாருக்குச் சொந்தமான குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சி பாங்கிஷாப் பகுதியில் ஏசுராஜ் என்பவருக்கு சொந்தமான பழைய பொருட்கள் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் தோல் பொருட்கள், நெகிழி பொருட்கள், டயர்கள் மற்றும் தோல் தொழிற்சாலை பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்த நிலையில், திடீரென இன்று காலை குடோனின் பின்பக்கத்தில் இருந்து தீ பரவத் தொடங்கியுள்ளது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனம் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

இது குறித்து உம்ராபாத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.