தமிழ்நாடு

தற்கொலை மிரட்டல் விட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள்!

webteam

அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர். 

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை பிரித்து திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடமாற்றம் செய்ய அரசும், சட்டக்கல்வி இயக்குநரகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த முடிவை எதிர்த்து சட்டக்கல்லூரி மாணவர்கள் சுமார் 100 பேர் கடந்த 4 நாட்களாக உள்ளிருப்பு போராட்‌டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களை, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் சட்டத்துறை செயலர் சந்திக்க முற்பட்டனர். ஆனால் மாணவர்களின் கோரிக்கைக்கு, செயலர் செவி சாய்க்கவில்லை என கூறப்படுகிறது. 

இதனை கண்டித்து அமைச்சர் மற்றும் செயலரின் உருவ பொம்மையை எரித்து மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை அடுத்து உள்ளிருப்பு போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 10 மாணவர்கள் மட்டும் சட்டக்கல்லூரியில் சீல் இடப்பட்டு இருந்த கட்டடத்தின் உச்சியில் ஏறி, தங்கள் கோரிக்கையை ஏற்க வலியுறுத்தி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.