தமிழ்நாடு

குற்றாலத்தில் குளிக்க அனுமதி : சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

webteam

இரண்டு நாட்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீரானதையடுத்து அங்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை மற்றும் கனமழை பெய்து வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மழையின் அளவு அதிகமாகவே காணப்பட்டது. குறிப்பாக தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்துள்ள குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்காக மாறியது.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். தற்போது குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீராகியுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆகவே சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை முதலே ஐந்தருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.