தமிழ்நாடு

சுர்ஜித்துக்காக மனம் உருக பிரார்த்திக்கும் தமிழகம்!

சுர்ஜித்துக்காக மனம் உருக பிரார்த்திக்கும் தமிழகம்!

webteam

ஆழ்துளைக்கிணற்றில் சிக்கியுள்ள சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டுமென தமிழகம் முழுவதும் மக்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது.

பின்னர்  70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை, அதன்பின் 85 அடி ஆழத்திற்கு சென்றான். இந்நிலையில் தற்போது குழந்தை மேலும் இறங்கி 100 அடி ஆழத்திற்குச் சென்றுவிட்டான். குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும். இதனிடையே 26 மணி நேரத்தை கடந்து, தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. சுர்ஜித்தை மீட்க அரசும், தனியார் அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தற்போது ஆழ்துளை கிணறு அருகில் குழி தோண்டி குழந்தையை மீட்கும் பணி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே சுர்ஜித் பத்திரமாக மீண்டு வர வேண்டுமென தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. நாகூர் தர்கா, ஏர்வாடி பள்ளிவாசல் போன்ற இடங்களில் பிரார்த்தனை நடைபெற்றது. மதுரையில் மாற்றுத்திறனாளிகள் ஒன்று சேர்ந்து சுர்ஜித்துக்காக கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தனர். 

சமூக வலைத்தளங்களில் பலரும் சுர்ஜித்துக்காக பிரார்த்தனை செய்து பதிவிட்டு வருகின்றனர். ''நாளை தீபாவளி என்றாலும் சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட்டாலே அது உண்மையான தீபாவளி கொண்டாட்டம்'' என பதிவிட்டு வருகின்றனர். ''நிச்சயம் சுர்ஜித் பத்திரமாக மீட்கப்படுவான்'' என நம்பிக்கையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுவே கடைசி சம்பவமாக இருக்க வேண்டுமென்றும், இனி வரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவதற்கு இந்த அரசும், பொதுமக்களும் அனுமதிக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்