விஜய் - அஜித் X
தமிழ்நாடு

நடிகர் அஜித் குமாரின் தாயார் மறைவு.. முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி உயிரிழந்திருக்கும் நிலையில், முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Premkumar S

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (84) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை உயிரிழந்துள்ளார். இவரது, உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அஜித்குமாரின் தாயார் மறைவுக்கு திரை உலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மோகினி மணி

இந்தசூழலில் தான், துபாயில் இருந்த நடிகர் அஜித் நேற்று இரவு நாடு திரும்பினார். அவரின் வருகைக்குப் பிறகு, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு சென்ற முதல்வர் விஜய், மறைந்த மோகினி மணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, நடிகர் அஜித்தை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார். அப்போது, நடிகை திரிஷா உடனிருந்தார்.

முன்னதாக, நேற்று காலை முதல்வர் விஜய் வெளியிட்டிருந்த இரங்கல் குறிப்பில், ”அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.