தமிழ்நாடு

தாய்லாந்தில் இருந்து வந்த பயணியிடம் சிங்கக்குட்டி பறிமுதல்.!

webteam

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த பயணியிடம் சிங்கக்குட்டியை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரும் பயணிகளை அவ்வபோது அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். இந்நிலையில் தாய்லாந்தில் ஒருவர் சிங்கக்குட்டியுடன் சென்னைக்கு விமானத்தில் வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று அதிகாலை சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் திடீரென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது தாய்லாந்தை சேர்ந்த பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரை
அழைத்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் சிங்கக்குட்டி இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவரிடம் இருந்து சிங்கக்குட்டியை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சிங்கக்குட்டியுடன் தாய்லாந்து பயணியை திருப்பி அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.