ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை நேரில் ஆஜராகுமாறு வற்புறுத்த வேண்டாம் என்று அவரது வழக்கறிஞர் அருண் நடராஜன் சிபிஐக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் மோசடி நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐயும், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. இதுதொடர்பாக கடந்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சிபிஐ முன் ஆஜராக மறுத்துவிட்ட அவர், தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்துவிட்டதால் சிபிஐ சம்மன் அனுப்ப முடியாது என்று பதில் கடிதம் அளித்திருந்தார். இதனை ஏற்றுக்கொள்ளாத சிபிஐ, அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தை நேரில் ஆஜராகுமாறு வற்புறுத்த வேண்டாம் என்று அவரது வழக்கறிஞர் சிபிஐக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஏர்செல் மேக்சிஸ் வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடித்து வைத்துவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு மீது உத்தரவு வரும் வரை, அவருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.