தமிழ்நாடு

அரசு முடிவெடுக்காததால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

அரசு முடிவெடுக்காததால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

webteam

எல்.பி.ஜி.யால் இயங்கும் ஆட்டோக்களுக்கு மானியம் வழங்குவது தொடர்பாக, அரசு முடிவெடுக்காததால் சென்னையில் காற்று மாசு அதிகரித்து வருவதாக மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில், அரசு முடிவெடுக்காததன் காரணமாக, எல்.பி.ஜி.க்கு மாறும் பெட்ரோல் ஆட்டோக்களின் விகிதம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு எல்.பி.ஜி.க்கு மாறும் ஆட்டோக்களுக்கு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மானியம் வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டது. இதற்காக, பழைய ஆட்டோக்களிடமிருந்து பசுமை வரி வசூலிக்கப்பட்டு, அதன் மூலம் மானியம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், இதன்மூலம் 136 கோடியே 13 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டும், அரசின் முடிவெடுக்காத நிலை காரணமாக மானியம் வழங்கப்படவில்லை என்று மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் 3-வது பெரிய மாநகரமான சென்னையில், இதன் காரணமாக காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவை விட, பெருமளவில் அதிகரித்து வருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.