தமிழ்நாடு

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக்குழு அமைத்தது எய்ம்ஸ் மருத்துவமனை

நிவேதா ஜெகராஜா

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவக்குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ, மருத்துவக்குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு தற்போது எய்ம்ஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவக் குழுவில் ஒரு கண்காணிப்பாளர், ஒரு உறுப்பினர், செயலர் என்று மொத்தம் 8 பேர் இடம் பெற்றுள்ளனர். குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான துறை ரீதியிலான வல்லுநர்கள் ஆவர்.

எய்ம்ஸ் சார்பில் மருத்துவக்குழுவை அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மருத்துவர்களுடன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வரும் 16 ஆம் தேதி ஆலோசனை மேற்கோள்ள திட்டமிட்டுள்ளது.