தமிழ்நாடு

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தகுதி உள்ளவர்களே நியமனம் - அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா

webteam

மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக கீழ்பாக்கம் மற்றும் ராயப்பேட்டை புற்றுநோயியல் அறுவை சிகிச்சை துறை தலைவரும் பேராசிரியருமான சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தகுதி உள்ளவர்கள்தான் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம். கடோச் நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. அதே போல கிண்டி டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவமனை துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷயன் மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை  புற்றுநோயியல் அறுவைசிகிச்சைப் பிரிவு மருத்துவர் சுப்பையா சண்முகம் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனை  உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றனர். 

முன்னதாக மருத்துவர் சுப்பையா கார் நிறுத்துவது தொடர்பாக, தனது வீட்டின் அருகில் வசித்து வந்த பெண் ஒருவருடன் தகராறில் ஏற்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்ததோடு மட்டுமல்லாமல் பயன்படுத்திய முக கவசங்களை விட்டுச்சென்றதாக புகார் எழுந்தது. இந்தப் பிரச்னை பூதாகாரமாக வெடித்த நிலையில், இரு தரப்பு பேச்சு வார்த்தையின் கீழ் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இதனை நினைவு கூர்ந்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சி தலைவர் அவரை உடனடியாக உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தகுதி உள்ளவர்களே எய்ம்ஸ் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய அரசு யாரை நியமிக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து நியமித்துள்ளது என்று கூறியுள்ளார்.