தமிழ்நாடு

ஈரோடு அதிமுகவின் கோட்டை இதை எவராலும் தகர்க்க முடியாது – செங்கோட்டையன்

webteam

நாங்கள் யாரும் பிரியவில்லை ஒன்றாக இணைந்திருக்கிறோம் என தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் பணிக்குழு கூட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடியார் தலைமையில் வெற்றி என்ற இலக்கை கிழக்கு தொகுதி அடையும் போது இந்தியாவே திரும்பிப் பார்க்க இருக்கிறது.

இந்த இயக்கம் பிரிந்து இருப்பதாக அனைவரும் சொல்கிறார்கள். பிரிந்தவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தேடிப் பார்க்கின்ற அளவிற்கு இந்த இயக்கம் இருக்கிறது. நாங்கள் யாரும் பிரியவில்லை ஒன்றாக இணைந்திருக்கிறோம், ஒன்றாகவே இணைத்து பணிகளை செய்து வருகிறோம் என்பதற்கு சான்றாக இந்த தேர்தல் களம் அமைந்துள்ளது.

தென் மாநிலமான தமிழகத்தில் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு அதிமுகவின் எஃகு கோட்டை இதை எவராலும் தகர்க்க முடியாது. கழகம் எப்படி பணியாற்றுகிறது என்பதை களப்பணிகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னரசு ஒருமனதாக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார் என்றார்.