இபிஎஸ், சண்முகம், வேலுமணி Pt web
தமிழ்நாடு

அதிமுக கொறடா.. என்ன முடிவெடுப்பார் சபாநாயகர்? பதவி இழக்கும் 25 எம்.எல்.ஏக்கள்?

அதிமுக கொறடாவை மீறி வாக்களித்த அந்த எம்.எல்.ஏக்கள் உள்பட 29 பேரின் மாவட்டச் செயலாளர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் பதவி நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார்.

Prakash J

அதிமுக இரண்டாகப் பிளவுபட்டிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, வேலுமணி தரப்பு 25 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் மனு அளித்து இருப்பதாக தகவல் வெளியானது. இதற்குப் போட்டியாக, எடப்பாடி கே.பழனிசாமி உட்பட 22 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசு மீது பரபரப்பான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, தவெக அரசுக்கு ஆதரவாக 144 உறுப்பினர்கள் வாக்களித்து இருந்த நிலையில், தமிழக வெற்றி கழக அரசு வெற்றி பெற்றது. அதில், எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 25 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இதையடுத்து, அதிமுக கொறடாவை மீறி வாக்களித்த அந்த எம்.எல்.ஏக்கள் உள்பட 29 பேரின் மாவட்டச் செயலாளர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் பதவி நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார். இந்த நிலையில், 25 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் மனு அளித்து இருப்பதாக தகவல் வெளியானது. இதற்குப் போட்டியாக, எடப்பாடி கே.பழனிசாமி உட்பட 22 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் மனு அளித்ததாக அதிமுக எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் தெரிவித்தார். கொறடாவின் உத்தரவை மீறி அவர்கள் செயல்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இன்னொரு புறம், அதிமுகவில் கொறடா நியமனம் தொடர்பாக மோதல் வலுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினர். தலைமைச் செயலகம் வருகை தந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர், கட்சியின் பொதுச்செயலர் நியமித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சபாநாயகர் ஜே.டி.சி பிரபாகர்

அதேசமயம், பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு தங்களுக்கே இருப்பதாகக் கூறி, சி.விஜயபாஸ்கரை கொறடாவாக ஏற்க வேண்டும் என வேலுமணி தரப்பினர் சபாநாயகரிடம் மனு அளித்தனர். இருதரப்பு கோரிக்கைகளையும் கேட்டறிந்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், சட்டமன்றச் செயலர் சீனிவாசனுடன் இதுகுறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இன்னும் சில நாட்களில் சபாநாயகர் இறுதி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் வெங்கட்ரமணன், “அதிமுக விவகாரத்தில் சபாநாயகர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதேநேரத்தில், அதிமுக தலைமையின் உத்தரவுக்கு எதிராக வாக்களித்த 25 எம்எல்ஏக்கள் பதவி இழக்க நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்