தமிழ்நாடு

பொதுக்குழு விவகாரம்: அதிமுக தலைமை நிலைய செயலகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு

webteam

கடந்த 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அதிமுக தலைமை நிலைய செயலகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் அக்கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் பொதுக்குழுவை நடத்தலாம். உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என தீர்ப்பு வழங்கினார்.

இதையடுத்து கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு,  எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டது உட்பட மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதேபோன்ற சிறப்பு தீர்மானமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவது தொடர்பான இரண்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை, ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்குவதும் என இரு தரப்பினரும் மாறி மாறி கட்சியில் நீக்கும் அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்த்ரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு கடந்த ஜூலை 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கடந்த 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை. அதனால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

பொதுக்குழு வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. அதிமுக தலைமை நிலைய செயலகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே வழக்கில் எடப்பாடி பழனிசாமியும் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நாடாளுமன்றத்துக்கு வெளியே போராடும் எம்.பி.க்களை அலறவிடும் கொசுக்கள்!