தமிழ்நாடு

10% இடஒதுக்கீடு விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கிறதா அதிமுக?

webteam

10% இடஒதுக்கீடு விவகாரம் குறித்து நடைப்பெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, தமிழகத்தில் நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைப்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது. 

10 சதவீத இடஒதுக்கீடு விஷயத்தில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை காலை 10:30 மணியளவில் நடைப்பெற உள்ளது. இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க சட்டமன்றத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பாகவும் 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை, `10% சதவீதம் இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது’ என அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் அறிக்கை விடுத்திருந்த நிலையில், நாளை நடைப்பெறும் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என சொல்லப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளைதான் தெரியவரும்.