தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு கூட்டம் - போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்!

ச. முத்துகிருஷ்ணன்

ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் எழுந்துள்ள சூழலில் அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெறுகின்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்கள் மூலம் வானகரத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

போக்குவரத்து நெரிசலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் சிக்கியதால், இருவரும் பொதுக்குழு வர தாமதமானது. மேலும் அமைந்தகரை ஸ்கைவாக் பகுதியில் அவசர சிகிச்சைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட காவலர்கள் ஆம்புலன்ஸ்க்கு தனி வழி ஏற்படுத்தி தர முயற்சி செய்தனர். ஆனால் பூந்தமல்லி வரையிலான சாலை முழுவதும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அளவுக்கு கடும் நெருக்கடி நிலவுவதால், ஆம்புலன்ஸ் முன்னேறிச் செல்ல முடியாமல் தவிக்கிறது.