தமிழ்நாடு

`ஜெயலலிதா நிரந்தரப் பொதுச்செயலாளர் விதி ரத்து’- அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்கள் விவரம்!

நிவேதா ஜெகராஜா

ஜூலை 11, அதிமுக பொதுக்குழுவை நடத்த இன்று காலை அனுமதி வழங்கி தீர்ப்பளித்திருந்தது சென்னை உயர்நீதிமன்றம். அதன்கீழ் இன்று காலை 9 மணி முதல் பொதுக்குழு தொடங்கியது. அதன்கீழ் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரங்கள் பின்வருமாறு:

* கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம்

* அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

* பொதுச்செயலாளரை தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றம்

* பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்க தீர்மானம். (இத்தீர்மானத்தின் கீழ்தான் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார்)

* நிரந்தர பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 4 மாதங்களுக்குள் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றம்

* பொதுச்செயலாளரால் நியமிக்கப்படும் பொறுப்பாளர்கள் பொதுச்செயலாளரின் பதவிக்காலம் வரை நீடிப்பார்கள் என தீர்மானம் நிறைவேற்றம்

* ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றம்

* துணைப் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கவும் தீர்மானம்

மேலும் சில தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. மொத்தம் 16 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளன. அதில் மேற்குறிப்பிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

* பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது தர பரிந்துரைப்பதற்கான தீர்மானம் உள்ளிட்டவையும் நிறைவேற்றப்பட உள்ளது.

* கட்டுமான மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீதான விலைவாசி உயர்வு, மின்வெட்டு தொடர்பாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது

* சட்டம் - ஒழுங்கை பேணிக்காக்க தவறியதற்காக திமுகவுக்கு கண்டனம்

* மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்; நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு மாநில அரசுக்கு வலியுறுத்தல்

* இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுக்கு வலியுறுத்தல்

* பழைய ஓய்வூதிய திட்டத்தின் திமுக வாக்குறுதியை சுட்டிக்காட்டி, திமுகவுக்கு வலியுறுத்தல்

* நூல் விலையேற்றத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்

* அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடுவதாக கூறி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தல்.