வைகைச்செல்வன் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

”காலத்தின் கட்டாயம் விஜய்..” தவெகவில் இணைந்தபிறகு இபிஎஸ் குறித்துப் பேசிய வைகைச்செல்வன்!

அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், இன்று முறைப்படி தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார்.

Prakash J

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், அதிக இடங்களைப் பெற்ற தவெக, திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், ஐ.யூ.எம்.எல். உள்ளிட்டபிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தவிர, ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் பங்கு கொடுத்துள்ளது. பின்னர், அக்கட்சிகள் திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவுடன் போய் இணைந்துவிட்டன. தற்போது, மதிமுகவும் அக்கூட்டணியில் போய் இணைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மாநிலத்தில் ஒரு புதிய ஆளும் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியாக முதல்வர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. இந்தக் கூட்டணி, அடுத்த திட்டம் குறித்து தீவிரமாய் ஆலோசித்து வருகிறது.

இதற்கிடையே, தமிழக அரசியலில் நாள்தோறும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலரும் தவெகவுக்குப் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிய அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், இன்று முறைப்படி தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார்.

வைகைச்செல்வன்

தவெகவில் இணைந்தது குறித்துப் பேசிய வைகைச்செல்வன், “அதிமுகவில் இருந்து மனவேதனையுடன் பிரிந்துவந்துள்ளோம். அதிமுகவில் சரியான தலைமை இல்லாத சூழலில், அங்கிருந்து பிரிந்து வந்து தவெகவில் இணைந்திருக்கிறோம். மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்துகொண்டிருந்தால், இபிஎஸ் மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும்? எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆளுமையாக விஜய் உருவெடுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் தகுதியுள்ள தலைவராக விஜய் உயர்ந்திருப்பதால், அவரைத் தேடி வந்து இணைந்திருக்கிறோம். எம்ஜிஆர் போன்று காலத்தின் கட்டாயம் விஜய். அவர் எங்களிடம் எளிமையாக, அன்பாக, பாசமாகப் பேசினார்” என்றார்.