தமிழ்நாடு

வேளாண் மசோதாக்கள் நகலெரிப்பு போராட்டம்: பெ.மணியரசன் கைது

Veeramani

மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ள புதிய வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, அந்த மசோதாக்களின் நகலை எரித்த தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்டோர் தஞ்சையில் கைது.

இன்று மாநிலங்களவையில் தாக்கலாகும் வேளாண் மசோதாக்களின் நகல்களை எரித்த தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்ட நிர்வாகிகள், காவிரி உரிமை மீட்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தஞ்சாவூரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டபோது இவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினார்கள்.

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை நிலத்தை விட்டும் வேளாண் தொழிலை விட்டும் அப்புறப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களை ஆதரிக்கும் விதமாக உள்ளது. உடனடியாக இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சார்ந்த மூன்று மசோதாக்களையும் திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் மக்களவையில் நிறைவேறிய மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. சட்டத்தை நிறைவேற்றக்கூடாது கிடப்பில் போட வேண்டும் என வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.

காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் வரும் 24-ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருச்சி ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதிலும் வேளாண் சட்ட மசோதாவின் நகல்களை எரிக்கும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் திடீரென அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட நிர்வாகிகள் தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ஆற்றுப்பாலத்தில் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.