தென் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் மருத்துவக் கல்லூரியான மதுரை மருத்துவக் கல்லூரி தனது 67 வயதை நிறைவுசெய்து 68-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
தென் தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கடந்த 1954-ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் நாள் அன்றைய முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் ஆட்சிக்காலத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான ராஜ்குமாரி அமித்கௌரி ஆகியோர் இணைந்து மதுரை மருத்துவக் கல்லூரியை தொடங்கி வைத்தனர். முதல் முறையாக 50 மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவப்படிப்பு மற்றும் அரசு இராஜாஜி மருத்துவமனையை இணைத்து இக்கல்லூரி தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் மருத்துவக்கல்வி கனவுடன் இருந்த மாணவர்களுக்கு மருத்துவம் கற்க மிகப்பெரிய வரப்பிரசாதமாக மதுரை மருத்துவக் கல்லூரி அமைந்தது. ஆரம்பத்தில் 50 மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவக் கல்லூரியில் தற்போது ஆண்டுக்கு 250 மருத்துவ மாணவர்கள் பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மருத்துவக் கல்லூரியில் 20 முதுநிலை பட்ட மேற்படிப்புகளும், உயர்கல்வி மருத்துவ பட்டப்படிப்பு என பல பிரிவுகள் உள்ளன.
செவிலியர், மருந்தியல், மருத்துவம்சாரா இளங்கலை, முதுநிலை படிப்பு என மொத்தம் ஆண்டுக்கு 700 மாணவர்கள் வரை பயிற்சி பெறுகின்றனர். மதுரை மருத்துவக் கல்லூரியோடு இணைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லூரி தொடங்கி நேற்றுடன் 67 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், மருத்துவமனை ஊழியர்கள், அதில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்களை உருவாக்கி தென்தமிழகத்தின் மருத்துவ சேவையை பூர்த்தி செய்ய இந்த மருத்துவக்கல்லூரி பெருமளவு உறுதுணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பயின்ற மருத்துவ மாணவர்கள் பலபேர் உலக நாடுகள் பலவற்றிலும் மருத்துவராக சேவை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை மருத்துவக்கல்லூரி 67 ஆண்டுகளை நிறைவு செய்து 68-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், துணை முதல்வர் மற்றும் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.