தமிழ்நாடு

50 ஆண்டுகள் நிறைவு.. ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர்கள் மீண்டும் சந்திப்பு

webteam

படித்து முடித்து 50 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர்கள் அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். 

சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் 1971 ஆம் ஆண்டு மருத்துவபடிப்பை துவங்கிய மருத்துவர்கள் கல்லூரி படிப்பை துவங்கி 50 வது ஆண்டு நிறைவு பெறுவதை பொன்விழாவாக கொண்டாட திட்டமிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று(13-08-2022 முதல்  15-08-2022 தேதி வரை) மூன்று தினங்கள் குடும்பத்தினருடன் பொன்விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சந்திப்பை நடத்தி வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடக்காமல் இருந்த முன்னாள் மாணவர் சந்திப்பு இப்போது மீண்டும் நடந்துள்ளது.

இந்த சந்திப்பு விழாவில் சென்னை, கோவை, மதுரை, ஈரோடு மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து, 70 மருத்துவர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தார் 170 பேரும் பங்கேற்றனர். கல்லுாரி காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்து ஒருவருக்கொருவர் மனம் நெகிழ்ந்தனர். தங்களுடன் கல்லுாரியில் பயின்ற மற்றும் மறைந்த நண்பர்களையும் நினைவுகூர்ந்தனர். இந்த சந்திப்பு மறக்கமுடியாத நினைவுகளை பசுமையாக மீண்டும் நினைவுபடுத்தியதாக நெகிழ்ச்சியுடன் கூறினர்.